பாகிஸ்தான் அனுப்பி வைக்கும் ஒரு பயங்கரவாதிகூட  இந்தியாவை விட்டு உயிரோடு திரும்பிப்போக முடியாது.. ராஜ்நாத் சிங் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 23, 2019, 11:09 AM IST
Highlights

பாகிஸ்தான் அனுப்பிவைக்கும் ஒரு பயங்கரவாதிகூட  இந்தியாவை விட்டு உயிரோடு திரும்பிப்போக முடியாது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
 

பாகிஸ்தான் அனுப்பிவைக்கும் ஒரு பயங்கரவாதிகூட  இந்தியாவை விட்டு உயிரோடு திரும்பிப்போக முடியாது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ’’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அந்த மாநில மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதாக இருந்தது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஒரு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டு இருக்கிறது. 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு, அந்த மாநில மக்களில் பெரும்பாலானோர் ஆதரவாக உள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு புற்றுநோய் போன்று இருந்தது. அந்த பிரிவு அந்த மாநிலத்தில் ரத்தம் சிந்துவதற்குத்தான் வழிவகுத்தது. பல ஆண்டுகளாக அப்பாவி மக்கள் 41 ஆயிரத்து 500 பேரும், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 5,500 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். 370-வது பிரிவை பொறுத்தமட்டில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒருபோதும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கவில்லை. இந்த பிரிவை ரத்து செய்ததன் மூலம் பாஜக தனது நேர்மையையும், நம்பகத்தன்மையையும் நிலைநாட்டி இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலம் மேம்பாடு அடையும்.

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. எவ்வளவு தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்புகிறது என்று பார்ப்போம். இந்தியாவுக்குள் நுழையும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது. அந்த அளவுக்கு எல்லையில் நமது ராணுவ வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்யக்கூடாது.  தனது மண்ணில் மனித உரிமைகள் மீறப்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் மனதில் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பற்றி மட்டுமே இனி பாகிஸ்தானுடன் பேசமுடியும்’’ என அவர் எச்சரித்துள்ளார். 

click me!