"GST வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலை உறுதி" - மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி திட்டவட்டம்

First Published Jun 1, 2017, 2:44 PM IST
Highlights
rajiv prathap says that 5 lakhs gets employment


ஜூலை மாதம் முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தபின், கம்ப்பியூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் உள்ள விஜய் நகர் பகுதியில் திறன்மேம்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “ ஜூலை மாதத்தில் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. வரி முறை நடைமுறைக்கு வரும் போது, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் பணிக்கு தேவை. அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவுடன் சிறிது நிதிதொடர்பான அறிவுத்திறனும் இருப்பது அவசியமாகும்.

நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது என்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதைக் காட்டிலும், இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தரும் அளவுக்கு திறன்மேம்பாட்டு பயிற்ச்சியையும், சுயவேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது.  இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் கன்றுக்குட்டியை காங்கிரஸ் கட்சியினர் கொன்றதை கடுமையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற செயல்கள் மூலம், மத்திய அரசன் மேம்பாட்டு திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற சம்பவங்களை அரசு கவனத்தில் கொள்ளும்’’ என்றார்.

click me!