
ரூபாய் நோட்டு விவகாரத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக முடக்கப்பட்டு வருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி (எம்.பி.க்கள்) கூட்டம் நேற்று நடைபெற்றது.
உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரசின் வருங்கால தலைவராக வர இருக்கும் தற்போதைய துணைத்தலைவரான ராகுல் காந்தி, முதன் முறையாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
பொதுவாக, இதுபோன்ற கூட்டங்களில் நிருபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, ராகுல் பேச்சின் முக்கிய பகுதிகள் டி.வி.க்களுக்கு வழங்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.