
தனது தகுதியின்மை, தற்பெருமை காரணமாக நாட்டை துயரத்தில் ஆழ்த்திவிட்ட பிரதமர் மோடி, ‘டி.ஆர்.பி. அரசியல்’ நடத்தி வருவதாக, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
டி.ஆர்.பி. அரசியல்
பல்வேறு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை, அவற்றை பார்வையிடும் ரசிகர்களிள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தர வரிசைப்படுத்துவது ‘டி.ஆர்.பி.’ (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்) என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் மக்களிடம் இருந்து அதிக அளவில் ஆதரவை பெறுவதற்கான விளம்பரங்களில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்பிடுவதற்காக, ராகுல் காந்தி ‘டி.ஆர்.பி. அரசியல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
தனது வலையிலேயே...
காங்கிரஸ் எம்.பி.க்கள் (நாடாளுமன்ற கட்சி) குழு கூட்டம், துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசியபோதுதான், மேற்கண்டவாறு ராகுல் தாக்குதல் தொடுத்து இருந்தார்.
தனது தகுதியின்மை தற்பெருமையால் நாட்டை துயரத்தில் ஆழ்த்திவிட்ட பிரதமர் மோடி, அவர் விரித்த வலையில் அவரே சிக்கிக்கொண்டார் என்றும், அது போன்ற பிரதமர் ஒருவரை காங்கிரஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு கொடுத்தது இல்லை என்றும், ராகுல் விமர்சித்தார். ராகுல் பேசும்போது மேலும் கூறியதாவது-
பேரழிவு முடிவு
‘‘ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டு இருந்தால், தற்போது அவர் செய்துள்ள தவறான பேரழிவு கொள்கை முடிவை எடுப்பதில் இருந்து தவிர்த்திருக்க முடியும்.
அரசின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் அனுபவங்களை பொருட்படுத்தாமல் முடிவு எடுக்கக்கூடிய பிரதமர் ஒருவரை நாங்கள் (காங்கிரஸ்) இந்த நாட்டுக்கு ஒரு போதும் கொடுக்கவில்லை.
புதிய கள்ளச்சந்தை
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியின் முடிவை அனைத்து பொருளாதார வல்லுனர்களும் கண்டித்து உள்ளனர்.
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக இரவு பகலாக வேலை செய்யும் புதிய கள்ளச்சந்தையை மோடி உருவாக்கிவிட்டார். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பணப் பொருளாதாரத்தையும் கருப்பு பண பொருளாதாரத்துடன் இணைத்து மோடி குழப்பி விட்டர்.
நிதி எதிர்காலம்
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத வங்கி நோட்டுகளை செல்லாது என்ற அறிவித்ததன் மூலம், நாட்டின் 130 கோடி மக்களின் நிதி எதிர்காலத்தை அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கி விட்டார்.
அனைத்து ரொக்கப் பணமுமே கருப்புப் பணம் அல்ல. அதேபோல் அனைத்து கருப்புப் பணமுமே ரொக்கப் பணம் அல்ல. கருப்புப் பணத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்த நாட்டின் அஸ்திவாரமாக அமைந்துள்ள பொருளாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டார்.
பாகிஸ்தான் கொள்கை
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்ததன் மூலமாக, பிரதமர் மோடி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு பெரிய அளவிலான அரசியல் இடம் அளித்துவிட்டார் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
மோடியின் இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல் வெற்றிடம் உருவாகி, அதன் மூலம் தீவிவரவாதிகள் நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தானைப் பொருத்தவரை, மோடி அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது. அரசின் பாகிஸ்தான் கொள்கை முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது’’.
இவ்வாறு ராகுல் கூறினார்.