
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முடிந்து 50 நாட்கள் ஆன பின்பும், நாட்டில் பணத்தட்டுப்பாடு தொடரத்தான் செய்யும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் பரன் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் பேசிய பிரதமர் மோடி, டிசம்பர் 30-ந் தேதியோடு 50 நாட்கள் முடிந்தவுடன் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறையும், பணத்தட்டுப்பாடு நீங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால், நான் உறுதியாகக் கூறுகிறேன், நிச்சயமாக பணத்தட்டுப்பாடு இம்மாதம் 30-ந்தேதிக்கு பின் நீங்கப்போவது இல்லை. இது அடுத்த 6 முதல் 7 மாதங்களோ அதற்கு பிறகும் தொடரும். ஆனால், மக்களிடம் பேசும் மோடி, 50 நாட்களுக்கு பின் அனைத்தும் சரியாகிவிடும் என தொடர்ந்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.
மத்தியில் ஆளும் மோடியின் அரசோ, மாநிலத்தில் ஆளும் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசும் மகக்ளின் துயரத்தைப் போக்க சிறுநடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரூபாய் நோட்டு தடை என்பது ஊழலுக்கோ, கருப்புபணத்துக்கோ எதிரானது அல்ல. இது ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பெண்களுக்கும் எதிரானது. இது பொருளாதார முடக்கம்.
99 சதவீத மக்களிடம் கருப்புபணம் இல்லை. அப்படி இருக்கையில், ரூபாய் நோட்டு தடை மூலம் மக்களை கொடுமைப்படுத்துகிறார். மறுபுறம் 50 குடும்பங்களிடம் மட்டும் கோடிக்கணக்கில்,் கருப்புபணம் இருக்கிறது.
உண்மையில் ஊழலை அழிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து இருந்தால், காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆதரவு அளிக்கும். 6 சதவீதம் கருப்பு பணம் மட்டுமே ரொக்கமாக இருக்கிறது, மற்றவை எல்லாம் ரியல் எஸ்டேட்களாகவும், தங்கமாகவும் பதுக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி, நாட்டை பிளவுபடுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளார், பணக்காரர்களுக்கு மட்டுமே உழைத்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளை கொலை செய்ய முயற்சி செய்தது, ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தையும் முடக்க மோடி அரசு சதி செய்தது. கடன் தள்ளுபடி, மின்கட்டண குறைப்பு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை ஆகிய 3 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விரக்தியில் பேசுகிறார் ராகுல்-பா.ஜனதா பதிலடி
பாரதியஜனதா கட்சியின் செய்தித் தொடர்பா ஸ்ரீகாந்த் சர்மா வௌியிட்டஅறிக்கையில், “ பிரதமர் மோடியின் பிரசாரம் கருப்புபணத்துக்கு எதிரான நடவடிக்கை வெற்றிபெறுவதைப் பார்த்து ராகுல் காந்தி விரக்தியில் பேசுகிறார். ரூபாய் நோட்டு தடையால் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் கூறுகிறார். இந்த வழக்கை உச்சநீதிமன்றமே எடுக்க மறுத்துவிட்டது என்பதை புரிய வேண்டும்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் இந்தியர்கள் பெயர் அடங்கிய பட்டியலை அரசு , சிறப்பு விசாரணைக்குழுவிடம் அளித்துவிட்டது. பெயர்களைவௌியிடுவது தான் அரசுக்கு உதவும் என்று நினைத்து இருந்தால், அரசு மற்ற நாடுகளில் இருந்து உதவி கோரி இருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.36 லட்சம் கோடி கடன் கொடுத்தது. மோடி அரசு அந்த கடனை திரும்பப் பெற போராடி வருகிறது'' எனத் தெரிவித்தார்.