தாம் அனுப்பிய கடிதத்துக்கு பதில் தெரிவிக்கும்போது மிரட்டும் தொனியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளதாக புதுவை அமைச்சர் கந்தசாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது-
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவ மாணவர்களை நீக்கிய விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேரில் முறையிட்டார்.
ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமியுடனான மோதல் போக்கு தற்போது அமைச்சர்களிடையேயும் எழுந்துள்ளது. புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநர் கிரண்பேடி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஆளுநர் கிரண்டிபேடி மிரட்டுவதாக அமைச்சர் கந்தசாமி குற்றம் சாட்டினார். பல்வேறு கோப்புகள் குறித்து ஆளுநருக்க தாம் கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதத்துக்கு ஆளுநர் மிரட்டும் தொனியில் பதில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் கந்தசாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.