லடாக் போராட்டத்தில் வெடித்த வன்முறை... பாஜக அலுவலகத்தில் தீ வைப்பு!

Published : Sep 24, 2025, 05:23 PM IST
Ladakh Protest

சுருக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை பாதுகாப்பு கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பாஜக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சோனம் வாங்சுக், வன்முறையை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சிறப்பு பாதுகாப்பு கோரி லே பகுதியில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததுடன், ஒரு வாகனத்தையும் எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

லே அபெக்ஸ் அமைப்பினர் போராட்டம்

லே அபெக்ஸ் அமைப்பின் (LAB) இளைஞர் பிரிவு விடுத்த அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, இந்திய அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பிரிக்கப்பட்டு, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து, லடாக் மக்கள் தங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.

சோனம் வாங்சுக்

காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, இளைஞர் பிரிவினர் கடையடைப்பு மற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

செவ்வாய்க்கிழமை, சோனம் வாங்சுக் தனது 15 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது, வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ஆதரவாளர்களை வலியுறுத்தினார். ஆனாலும், ஒரு குழுவினர் கற்களை எறிந்ததால் நிலைமை மோசமானது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பின்னர், போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திற்கு தீ வைத்தனர். அமைதியைக் காக்கவும், மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபரில் பேச்சுவார்த்தை

மத்திய அரசுக்கும், லடாக் பிரதிநிதிகளான லே அபெக்ஸ் அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) உறுப்பினர்களுக்கும் இடையே அக்டோபர் 6-ம் தேதி ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆனால், நீண்டகால உண்ணாவிரதம் மற்றும் மக்களின் கவலைகளை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை தேதியை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வன்முறையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்த சோனம் வாங்சுக், "வன்முறை, மோதல்களை நிறுத்துங்கள். நாங்கள் எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டோம். நிர்வாகம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். வன்முறையில் உயிர்கள் பலியாகும்போது எந்த உண்ணாவிரதமும் வெற்றி பெறாது" என்று கூறினார். இந்த கலவரம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய லடாக் விழாவின் நிறைவு விழா ரத்து செய்யப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!