
தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
பவள விழா சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நாளை தினத்தந்தி நாளிதழ் பவளவிழா கொண்டாடப்பட உள்ளது.
இதில், பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து சென்னை விமானநிலையம் வரும் மோடி, அங்கிருந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அந்த இடத்தில் இருந்து கார் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மோடி செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விழா மலரை வெளியிடுவதுடன் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.
‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்ற பிறகு பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் மோடி கலந்து கொள்கிறார்.