அம்பேத்கர் காட்டிய பாதையில் நடப்பதே நமது கடமை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

By SG BalanFirst Published Jan 26, 2023, 8:56 AM IST
Highlights

அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய பாதையில் நடப்பதே நமது கடமை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது குடியரசு தின உரையில் வலியுறுத்தியுள்ளார்.

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்த அவர், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றி அடைந்துள்ளோம் என்றார்.

“குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் அடைந்தவற்றைக் கொண்டாடுகிறோம். பலவிதமான மதங்களும் மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை. ஒன்றிணைக்கவே செய்துள்ளன” எனப் பெருமிதம் தெரிவித்தார்.

உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நம் நாட்டின் அடித்தளத்தை உருவாக்கித் தந்துள்ளனர். அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையில் நடப்பது நமதே நமது கடமை” என்று திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “காந்திஜியின் இலட்சியமான ‘சர்வோதயம்’ என்ற அனைவரின் மேம்பாட்டையும் நிறைவேற்ற இன்னும் நிறைய பணிகள் செய்யவேண்டி இருக்கின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். அனைத்துத் துறைகளிலும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் நமக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

“பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அரசின் தீவிரமான செயல்பாடுகளால் இது சாத்தியமாகியுள்ளது. ‘தற்சார்பு இந்தியா’ திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது” எனவும் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் 15 பெண்களும் பங்களித்துள்ளனர் என்பதை எண்ணி பெருமை கொள்வதாகக் கூறிய குடியரசுத் தலைவர் முர்மு, “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும் பாலின சமத்துவமும் வெறும் கோஷங்கள் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக இவற்றில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. பெண்களே நாளைய இந்தியாவை வடிவமைக்கும் சக்தியாக இருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

click me!