
1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியின் பொன்விழா மற்றும் புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் 16-ம் ஆண்டு விழா இன்று லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவில் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நினைவு பரிசுகளும், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையும் முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் ''நாட்டின் எல்லையில் கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து நேரங்களிலும் நாட்டையும், மக்களையும் பாதுக்காப்பதில் அர்பணிப்போடு ராணுவ வீரர்கள் பணியாற்றிகின்றனர். எனவேதான் அவர்களுக்கு அரசு அதிக நிதியை செலவிடுகிறது. கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் தற்போது வரை புதுச்சேரியில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாகவும் அதனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் பேசினார்.
இனி வரும் காலங்களில் இந்தியா –பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை முப்படை நலத்துறை அலுவலகத்தில் தான் கொண்டாடப்பட வேண்டும் என்றார். நான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற அசைக்க முடியாது எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு என்ற அவர் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தேன். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.
இதனிடையே முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறிய அவர் இந்தாண்டு கொடுக்க முடியாது எனவும் அடுத்தாண்டு மருத்துவ கல்வியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்படும் என்றார். இதேபோல் அரசு பணியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது இல்லை. குரூப் சி பணியிடங்கள் குரூப் பி ஆக மாறிவிட்டது. இதனால் குரூப் பி பணியிடத்தில் உடனே இடஒதுக்கீடு அறிவிக்க முடியாது. இதுகுறித்து நிர்வாகத்தில் கலந்து பேசி இடஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இருந்தால், நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்.பி செல்வகணபதி , எம்.எல்.ஏ வைத்தியநாதன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.