வேகமெடுக்கும் கொரோனா... போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்... புதிய தேதி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 5:33 PM IST
Highlights

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.  இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து நாடு முழுவதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு இது கூடுதலான பணிச்சுமையை உண்டாக்கும், சொட்டு மருந்து செலுத்த வரும் குழந்தைகளுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!