அதிகரிக்கும் கொரோனா... இந்த தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... அரசு அதிரடி!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 3:12 PM IST
Highlights

புதுச்சேரியில்  ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

புதுச்சேரியில்  ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  2,38,018  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு  மீண்டவர்களின்  எண்ணிக்கை 1,57,421 ஆக உள்ளது. அத்துடன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,36,628 ஆக பதிவாகியுள்ளது. மேலும்  ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,891 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த  ஜனவரி 31 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வர அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று புதிதாக 1,715 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,893 ஆக  அதிகரித்துள்ளது. இதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா  அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால்  நாளை முதல் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

click me!