
நாட்டில் உள்ள 400 போலீஸ் நிலையங்களில் வாக்கி டாக்கி, தொலைபேசி, வாகனங்கள் கூட இல்லை என்று போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றங்களைத் தடுக்கவும், குற்றம் செய்பவர்களை பிடித்து, சட்டத்தை நிலைநாட்டும் போலீஸ் துறைக்கு போதுமான வசதிக் குறைவுகள் இருப்பதன் காரணமாகவே, தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்று என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(பி.பி.ஆர்.டி) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-
15 ஆயிரம் போலீஸ் நிலையம்
நாட்டில் ஒட்டு மொத்தமாக 15 ஆயிரத்து, 555 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 14 போலீஸ் நிலையங்கள் கிராமப் புறங்களிலும், 5 ஆயிரத்து 25 போலீஸ் நிலையங்கள் நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற போலீஸ் நிலையங்கல் ரெயில் போலீஸ் நிலையங்கள் ஆகும். போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வின்படி, போலீஸ்துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து 358 வாகனங்கள் இருக்கின்றன. அதில், தேசிய அளவில் 100 போலீஸ்காரர்களுக்கு 10 வாகனங்கள் என்ற அளவில் இருக்கிறது.
அதிகபட்சம் மஹாராஷ்டிராவில் போலீஸ்துறையில் 17 ஆயிரத்து 131 வாகனங்களும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 926 வாகனங்களும், உத்தரப்பிரதேசத்தில் 13 ஆயிரத்து 452 வாகனங்களும் இருக்கின்றன. நாட்டின் எல்லை ஓரமாநிலங்களில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு போதுமான வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்து கொடுக்கப்படவில்லை.
தொலைபேசி வசதி இல்லை
தேசிய அளவில் இன்னும் 400 போலீஸ் நிலையங்களில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லை. இந்த 400 போலீஸ் நிலையங்களில் 188 நிலையங்களில் ஒரு வாகனம்கூட இல்லை. 134 போலீஸ் நிலையங்களில் வாக்கி டாக்கி வயர்லெஸ் கருவிகள் இல்லை, 65 போலீஸ் நிலையங்களில் வயர்லெஸ் கருவிகளும், தொலைபேசி வசதியும் இல்லை.
வாகனம் இல்லை
குறிப்பாக நாட்டின் எல்லை ஓரம் இருக்கும் மணிப்பூரில் 43 போலீஸ் நிலையங்களில் தொலைபேசியோ அல்லது வயர்லெஸ் கருவிகளோ இல்லை. நக்சலைட்டுகள் பிரச்சினை அதிகம் இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் 161 போலீஸ் நிலையத்துக்கு ஒரு வாகனம் கூட கிடையாது.
உத்தரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசத்தில் 111 போலீஸ் நிலையங்களுக்கும், மேகாலயா, மணிப்பூரில் 67 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி வசதி கூட இல்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 51 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி வசதியும், 17 போலீஸ் நிலையங்களில் வயர்லெஸ் வசதியும் கிடையாது.
5 லட்சம் பேருக்குவீடு
கடந்த 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என ஒட்டுமொத்தமாக 22 லட்சத்து 80 ஆயிரத்து 691 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 539 பேருக்கு மட்டுமே தனியாக வீடு வழங்கப்பட்டுள்ளது.
729-க்கு ஒருவர்
போலீஸ்துறையில் போதுமான ஆட்கள் நியமிக்கப்படாதது, தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றால் குற்றங்களை தடுக்க முடியாமல் இருந்து வருகிறது. சைபர்கிரைம், தீவிரவாதம், சமூகக் குற்றம், நக்சலைட்டுகள் பிரச்சினைகள் இருக்கும் சூழலில் 729 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற வீதத்தில்தான் இருக்கிறது.
அதிலும், ஆந்திரப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்காளம், தாதர் நாகர்ஹவேலி, டெல்லி, ஆகிய மாநிலங்களில் 1,100 பேருக்கு ஒரு போலீசார் என்ற வீதத்தில் உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பிரச்சினை அதிகம் உள்ளது. ஆனால், இங்கு பெரும்பாலன போலீஸ் நிலையங்களுக்கு வயர்லெஸ், வாகன வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. போலீஸ்காரர்களுக்கு குறைந்தபட்ச வசதியாக ஒரு தொலைபேசி, வாகனம், வயர்லெஸ் கருவி இருப்பது அவசியம்'' எனத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.