
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முடக்கும் வகையில் ஜந்தர்மந்தரில் ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
இதையடுத்து நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேகொண்டு வருகிறேன்.எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டு கொண்டார்.
அதற்கு பதிலலளித்து பேசிய அய்யாக்கண்ணு, எங்களுக்கு உறுதிமொழி கடிதம் வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் போராட்டமும் நடத்த மாட்டோம், வீட்டிற்கும் செல்ல மாட்டோம், இங்கயே அமைதியாக அமர்ந்திருப்போம் என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து ஏரளாமான போலீசார் ஜந்தர்மன்தரில் குவிக்கப்பட்டுள்ளனர். கூடாரம் அகற்றப்படலாம் என தகவல் பரவி வருகிறது.
இதற்கு போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். அனுமதி பெற்று போராட்டம் நடைபெறுவதால் கூடாரம் அகற்றபடாது என தெரிவித்துள்ளனர்.