மாஸ்கோ துப்பாக்கிச்சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

By Manikanda PrabuFirst Published Mar 23, 2024, 10:03 AM IST
Highlights

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள பிரம்மாண்ட இசை அரங்கில், ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த  இசை அரங்கில் நுழைந்த பயங்கரவாதிகள் தீடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர்.

அந்த தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3ஆவது முறையாக அதிபராகி முன்னாள் அதிபர் ஸ்டாலினின் சாதனையை முறியடித்தார். இந்த நிலையில், மாஸ்கோ இசையரங்கில் நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். “மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம். இந்த கடினமான நேரத்தில் ரஷ்ய அரசிற்கும், மக்களுக்கும் இந்தியா துணை நிற்கிறது.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா எங்கள் "நெருங்கிய கூட்டாளி" - டெல்லியில் இருந்து "கடன் நிவாரணம்" கோரிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு!

மாஸ்கோ இசையரங்கில் நடைபெற்ற தாக்குதல், ரஷ்யாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக அறியப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ரஷ்யாவில் ஐ.எஸ் அமைப்பு கடந்த சில மாதங்களாகவே சதி வேலைகளை அரங்கேற்ற முயற்சித்து வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் நடக்கவிருந்த தாக்குதலை அந்நாட்டு உளவுத்துறை முறியடித்தது. அதற்கு சில நாட்களுக்கும் முன்னதாக ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 6 பேரை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!