
பெட்ரோல் பங்க்குகள், சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மேலும் 10 நாட்களுக்கு செலுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரமே முடங்கியது. சாலையில் வாகனங்கள் , வணிகர்கள் , ஹோட்டல்கள் , அனைத்து தொழில்களும் முடங்கியது.
இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு அத்யாவசியமான விஷயங்களில் பழைய நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதில் அரசு அலுவலகங்கள் , பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் இது போன்ற ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த பிரச்சனை தீரவில்லை , இதனால் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
குறிப்பிட்ட இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக இருந்த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.