
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில்(என்.சி.ஆர்.) தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடையில்லை. அதேசமயம், நவம்பர் 1-ந்தேதி வரை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று பட்டாசு விற்பனையாளர்கள் தாக்கல் செய்த கோரிக்கை மனு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
உடல்நலப் பிரச்சினைகள்
டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் தீபாவளிப்பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, ல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆதலால் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விற்பனைக்கு தடை
இந்த மனுவை ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி உச்ச நீதிமன்றம் டெல்லியில் பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்தது. மேலும், டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிக்குள் பட்டாசுகள் விற்பனையாளர்களின் உரிமம், மொத்த விற்பனையாளர்கள் உரிமம் ஆகியவற்றையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மீண்டும் மனு
இந்நிலையில், பட்டாசு உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களின் இருப்பில் இருக்கும் பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விற்பனை செய்ய அனுமதி
இதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 12-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் “ பட்டாசுகள் விற்பனைக்கு நிரந்த உரிமம் பெற்றவர்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, வெடிபொருள் சட்டத்தின் படி பட்டாசுகளை விற்பனை செய்யலாம் ’’ எனத் தீர்ப்பளித்தனர்.
அக்.31வரை தடை
இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் கடந்த 9-ந்ேததி அளித்த தீர்ப்பில், “ உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 12-ந்தேதி பிறப்பித்த உத்தரவான, பட்டாசுகள் விற்பனை செய்ய பாதியளவு தடையை நீக்கிய உத்தரவை மாற்றவில்லை. அதேசமயம், அக்டோபர் 31-ந்தேதி வரை டெல்லி, என்.சி.ஆர்.பகுதியில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது ’’ என உத்தரவிட்டது.
விற்பனையாளர்கள் மனு
இந்நிலையில், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு விற்பனையாளர் தரப்பில் அவசர மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனுவில் “ கடந்த மாதம் 12-ந்தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று ஏராளமாக செலவு செய்து பட்டாசு விற்பனை உரிமத்தை புதுப்பித்து விட்டோம், பட்டாசுகளையும் அதிகமாக கொள்முதல் செய்துவிட்டோம்.இந்நிலையில் கடந்த 9-ந்தேதிபட்டாசுவிற்பனைக்கு விதித்த தடை எங்களை கடுமையாக பாதிக்கும். ஆதலால் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
வெடிக்கத் தடையில்லை
அந்த மனு நீதிபதி ஏ.கே. சிக்ரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், “ டெல்லி, என்.சி.ஆர். பகுதியில் தீபாவளி அன்று பட்டாசுகள் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. அதேசமயம், பட்டாசுகள் வெடிக்கத் தடையில்லை’’ எனத் தெரிவித்தார்.