
டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணத்தை ஒழித்துவிட முடியாது. இதன் மூலம் ஊழலையும் ஒரு போதும் அகற்றி விட முடியாது என்று தெரிவித்தார்.
நேரு காலத்திலும், இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் கூட ஊழல்கள் நடந்தன. இதற்காக காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே ஊழல் நடந்ததாக சொல்வது சரியல்ல.
ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என தெரிவித்த அவர்,
சமீபத்தில் புதிதாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்தது. அந்த ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வாங்கிய அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தற்போதைய மத்திய அரசால் என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இடத்தில் இப்போது தான் இருந்திருந்தால், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டாம் என்று யோசனை கூறி இருப்பேன் என்றும், ஒரு வேளை தனது யோசனையை பிரதமர் ஏற்காவிட்டால் நிச்சயமாக தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருப்பேன் என தெரிவித்தார்.