
புதுச்சேரியில் கொரோனா பரவலால் கடந்த 2020 மார்ச்சில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக பள்ளிகள் திறப்பது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ,அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒரு மாதமே பள்ளிகள் நடந்து வந்த சூழலில் புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடத்த அனுமதி தரப்பட்ட சூழலுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதையடுத்து கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று பிறப்பித்த உத்தரவில், "கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெறும் " என்று தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே திறந்து நடைபெறும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். அதில் மாற்றம் ஏதுமில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்தம் 83 ஆயிரம் சிறார்களுக்கு பெற்றோர் அனுமதி பெற்று தடுப்பூசிப் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் புதுச்சேரியில் 350 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 9 பேர் என மொத்தம் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,150 பேரும் என மொத்தமாக 1,250 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இரு தவணை தடுப்பூசி உட்பட இதுவரை 14 லட்சத்து 63 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.