டிசம்பர் 1-ந்தேதி டெல்லி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, இளைஞர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
இளைஞர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு என்னவிதமான பணிகளைச் செய்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு தன்னுடைய ஒபாமா அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஒபாமா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் இந்தியாவுக்கு டிசம்பர் 1-ந்தேதி அவர் வருகை தருகிறார்.
அது குறித்து சமூக ஊடகங்களில் ஒபாமா அறக்கட்டளை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது-
இந்தியா முழுவதும் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் இளைஞர்களிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று இளைஞர்களைச் சந்தித்து கலந்தாய்வு செய்ய இருக்கிறேன்.
அப்போது, அந்த இளைஞர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு எவ்வாறு நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய முயல்கிறார்கள் என்பது குறித்து என்னிடம் பேசுவார்கள். அவர்களுக்கு என் அறக்கட்டளை மூலம் தேவையான உதவிகள்செய்வதுகுறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இதேபோன்று ஜெர்மனி, இந்தோனேசியா, பிரேசில் நாடுகளுக்கும் ஒபமா சென்று இருந்தார்.
ஒபாமா அறக்கட்டளை அமைப்பின் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பெர்நாடேட்டே மீஹம் கூறுகையில், “ கலாச்சாரரீதியாக, மதரீதியாக, மொழிரீதியாக, வேறுபாடு கொண்ட நாடுகள் பூமியில் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. 35 வயதுக்கு கீழ் 100 கோடி இளைஞர்களை கொண்ட நாடு. புத்தாக்க வழிகளைக் கண்டுபிடித்து, நாட்டை சாதகமான மாற்றங்களுக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.