
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டது. அதன் மூலம் இந்தியாவிற்குள் ஒமைக்ரான் வகை தொற்று நுழந்தது. அதை தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் உறுதியானது. அதை தொடர்ந்து நைஜீரியாவில் இருந்து மகாராஷ்டிரா வந்த 44 வயதான பெண், அவரது இரண்டு மகள்கள், அவரது 45 வயதான சகோதரர் மற்றும் சகோதரரின் 2 மகள்களுக்கும் என 6 பேருக்கும் ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. கூடுதலாக, புனேவில் 47 வயதான ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மகாராஷ்டிராவின் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. மும்பையில் 3 பேருக்கும், பிம்ரியில் 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் குஜராத்தில – 3, ராஜஸ்தான்- 9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-17, டெல்லியில் ஒருவருக்கு என இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர், ஜிம்பாப்வே நாட்டில் இருந்து டெல்லி திரும்பியவர் என்றும் அதற்கு முன் தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.