
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, அவரது மகன் பிரியங்க் கார்கே பிரதமரை 'நாலயக் பேட்டா' (உதவாக்கரை மகன்) என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பிரியங்க், பிரதமர் மோடியின் சமீபத்திய கலபுர்கி வருகையைக் குறிப்பிட்டுப் பேசினார். சமீபத்தில் பஞ்சாரா சமூகத்தினரிடம் பேசிய பிரதமர் மோடி, "கவலைப்பட வேண்டாம், பஞ்சாராவின் மகன் ஒருவர் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்" எனக் கூறியது பற்றி கருத்து தெரிவித்ததார்.
"இப்படிப்பட்ட உதவாக்கரை மகனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இப்படிப்பட்ட உதவாக்கரை மகனை வைத்துக்கொண்டு எப்படி குடும்பத்தை நடத்துவது?" என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை 'உதவாக்கரை' என்று அழைப்பதன் மூலம், பிரியங்க் கார்கே தனது தந்தையை மிஞ்சுவிட்டதாக கர்நாடக பாஜகவின் இணை செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் சலவாடி நாராயணசாமியும் பிரியங்க் கார்கே கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், “கார்கே ஜி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவரது மகனும் பிரதமரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். நாங்கள் மக்கள் மன்றத்தில் இருக்கிறோம், அவர்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள்." என்று அவர் கூறினார்
கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பிரியங்க் கார்கேவின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், மல்லிகார்ஜுன கார்கே தனது மகன் அவ்வாறு பேசவே இல்லை எனத் தெரிவித்துள்ளார். "எல்லா இடங்களிலும் இதுபோல வேண்டுமென்றே, சொல்லாத விஷயத்தைச் சொன்னதாக பரப்பும் வேலை நடக்கிறது. ஏற்கெனவே பிரியங்க் இதைக் கண்டித்துள்ளார்" என்று அவர் கூறினார்.
அண்மையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, மோடியை ஒரு விஷப் பாம்பு என்று கூறினார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்ததால், தனது கருத்துக்கள் பிரதமரை குறிவைக்கவில்லை என்றும் ஆளும் பாஜகவின் கொள்கைகளையே தான் குறிப்பிட்டதாக தெளிவுபடுத்தினார்.