
ஒயின் ஷாப்புக்கு நிரந்தர பூட்டு….மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த சிவராஜ் சிங் திட்டம்..
மத்திய பிரதேச மாநிலத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும், என்றும் , முதல் கட்டமாக நர்மதா நதிக்கரையை ஒட்டியுள்ள அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்படும் என அம் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில், பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில், மதுக் கடைகளுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய அற்றும் மாநில, நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக குடியிருப்பு பகுதிகளில், புதிய கடைகளை திறக்க, கலால் வரித்துறை அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால் இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல மாவட்டங்களில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நரசிங்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியபோது, மத்திய பிரதேச மாநிலம் முழுவதும், பூரண மது விலக்கை அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, நர்மதா நதிக்கரையை ஒட்டியுள்ள மதுக் கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்படும் என தெரித்தார்.
குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், கல்விக் கூடங்கள் உள்ள இடங்களை சுற்றி செயல்படும் மதுக் கடைகள் அனைத்தும் படிப்படியாக அற்றப்படும் என்றும், மாநிலத்தில், பூரண மது விலக்கு என்ற கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார்.