
பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்தபின்பும், நாட்டில் இன்னும் 32 கோடி பேருக்கு கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், திறந்தவெளிக்கழிப்பிடம் இல்லாமல் இதுவரை சிக்கிம், இமாச்சலம், கேரளா, உத்தராகண்ட் மற்றும் ஹரியாணா ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே மீண்டுள்ளன. தலைநகர் டெல்லியில் கூட இன்னும் திறந்த வெளிக் கழிப்பிடங்கள் தொடர்ந்து இருக்கிறது.
பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கும் போது, நாட்டில் 55 கோடி பேருக்கு கழிப்பிட வசதிகள் இல்லை, இப்போது அது 32 கோடியாகக் குறைந்துள்ளது.
சுகாதாரம் முறையாக இல்லாததால் ஆரோக்கியக் குறைபாடுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதோடு நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப்போக்கினால் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 2 ஜம்போ ஜெட் விமானங்கள் விழுந்து நொறுங்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கு சமமாகும்.
இது குறித்து மத்திய குடிநீர் மற்றும்சுகாதார அமைச்சகத்தின் செயலாறர் பரமேஸ்வரன் ஐயர் கூறுகையில், “ ஒட்டுமொத்தமாக சுகாதார பற்றாக்குறையால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது ஆனால் குடிநீர் மற்றும் சுகாதாரம் மாநிலங்கள் கையில்தான் உள்ளது.
மத்திய அரசு தொழில்நுட்ப, திறன் மற்றும் கொள்கை ஆதரவுகளை மட்டுமே அளிக்க முடியும். நம்நாட்டில் கலாச்சார வேறுபாடுகள் தொடர்ந்து இருப்பது, குடிநீர் பற்றாக்குறை, பெண்களுக்கு குறுகிய பங்கு ஆகிய காரணங்களால் தூய்மை இந்தியா திட்டத்தை விரிவாக எடுத்துச் செல்ல முடியவில்லை” என்றார்.