
வியாபாரியிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை அங்கிருந்த குரங்கு ஒன்று பறித்துச் சென்றது. இந்த ‘கொள்ளை’ குறித்து எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் போலீஸார் குழம்பியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் அங்கு கடை வைத்திருக்கும் அவர் தனது மகள் நான்சியுடன் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்றார். வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு தனது மகளிடம் கொடுத்துள்ளார் விஜய். பின்னர் இருவரும் நடந்தபடியே வெளியே வந்துள்ளனர்.
அப்போது திடீரென சில குரங்குகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. அந்த குரங்குகள் அவர்களை தாக்க முயன்றன. அதில் ஒரு குரங்கு நான்சி கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை சுற்றப்பட்ட பிளாஸ்டிக் பையை பறித்துக் கொண்டு ஓடியது.
அந்த குரங்கை விரட்டியபடி விஜய் சென்றார். வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால், குரங்கு அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்கு தாவியது. பின்னர் அங்கு சென்று அமர்ந்து கொண்டது. அனைவரும் அந்த குரங்கிடம் கெஞ்சினர். சற்று நேரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதில் இருந்து ரூபாய் நோட்டுக்களை கிழித்தபடியே வீசி ஏறிந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதுபோலவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் மீண்டும் பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடியது.
குரங்கிடமிருந்த பணத்தை கைப்பற்றவேண்டுமென்று அனைவரும் விரட்டிச் சென்றனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து குரங்கு எஸ்கேப் ஆனது. சுமார் 60 ஆயிரம் ரூபாயை குரங்கிடம் இருந்து மீட்ட விஜய், மீதமுள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். பின்னர் இதுபற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றார்.
ஆனால் போலீஸாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பிபோயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த விஜய், புகார் அளித்துள்ளார் அதில், வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்