தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக திகழும் டெல்லியில், உள்ள மக்கள் நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசி த்து வருகின்றனர்.
காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் டெல்லியில் காற்று மற்றும் ஒலி மாசு பல மடங்கு அதிகரித்தது.
கடந்த தீபாவளியின்போது, தொடர் பட்டாசு வெடிப்பு காரணமாக டெல்லி மாநகரம் புகை மண்டலமாக மாறியது. அடர்ந்த பனியும், பட்டாசு புகையும் சேர்ந்ததால் எங்கு பார்த்தாலும் வெண் புகை போல காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை 8 மணி வரை டெல்லியின் பல பகுதிகளிலும் இந்த அடர்ந்த புகை இருந்தது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவதால் டெல்லியில் மாசு அதிகம் ஏற்படுகிறது. அதனால் டெல்லியில் பட்டாசு வெடிக்கவும் விற்கவும் தடைவிதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.