நாகாலாந்து துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் மன்னிப்புக்கோரி உள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
Nagaland firing: நாகாலாந்து மாநிலத்தில் சனிகிழமையன்று இரவு, சுரங்க தொழிலாளிகள் சென்ற வாகனத்தை தீவரவாதிகள் என நினைத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் பொதுமக்கள் தரப்பில் இருந்து மேலும் ஒருவர் மற்றும் ஒரு இராணுவ வீரர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டினை கண்டித்து அரசியல் தலைவர் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்தினர். மேலும் நடந்து வரும் குளிர்கால கூட்டதொடரில் நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை குறித்து விவாதிக்கபட வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் இதுக்குறித்து மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சனிகிழமை இரவு சம்பவம் நடந்த இடத்தில், தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, 21 ஆம் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தினர், தொடர்ந்து வாகனத்தை நிறுத்தாமல் செலுத்தியதால், அதில் தீவிரவாதிகள் இருப்பதாக கருதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பின்பு வாகனத்தை சோதனை செய்ததில் தவறுதலாக சுட்டது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாகனத்தில் இருந்து 8 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மீதமுள்ள காயமுற்ற இருவரை, இராணுவ வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இதனால் நிலைமை கட்டுப்படுத்த , தற்காப்பிற்காக ராணுவவீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் 7 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி , அசாம் ரைபிள் முகாமிற்கு நுழைந்த 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் , முகாமை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலை கட்டுபடுத்த நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
நாகாலாந்தின் தற்போதைய நிலை பதற்றமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளது. நாகாலாந்து காவல்துறை இயக்குனரும், காவல் ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மாநில குற்றவியல் காவல்துறையிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு விசாரணை குழுவானது ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவு செய்து முழு அறிக்கையும் தாக்கல் செய்யும். பாதிக்கபட்ட இடங்களில் மேலும் பிரச்சனைகள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தலைமையகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், எதிர்பாராமல் நிகழந்த அப்பாவி மக்களின் உயிரிழப்பு மன்னிப்பு கோரியுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் நாகாலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது தலைமையில், தலைமை செயலாளர், மூத்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். இந்த அலோசனையில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று உறுதியளிக்கபட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
நாகாலாந்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. மேலும் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் மத்திய உள்துறை அமித் ஷா இந்த விளக்கத்தை அளித்தார்.
இதற்கிடையே, மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நாகலாந்து முதலமைச்சர் நெய்பி ரியோ வலியுறுத்தியுள்ளார். பதற்றம் நிறைந்த பகுதி என்று கூறி, ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நாகலாந்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இங்குள்ள அனைத்து ஆயுதக்குழுக்களும் சண்டை நிறுத்தத்தை அறிவித்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன. அப்படி இருக்கையில் எதற்காக இந்த சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டும்? என்று கூறியுள்ளார்.