
சாதி, மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது ஆங்காங்கே மதக்கலவரமோ சாதி மோதலோ நடைபெற்றுவருகிறது. ஆனால், உண்மையாகவே சாதி, மதங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லீவ்டோரா என்ற சிறிய முஸ்லீம் கிராமத்தில், ஒரே ஒரு இந்து குடும்பம் மட்டும் வசித்து வருகிறது. பாபி கவுல் என்ற இந்து பெண்ணின் கணவர் இறந்துவிட அந்த பெண், 2 மகள்கள், 2 மகன்கள் என தனது 4 குழந்தைகளுடன் தவித்து வந்தார். கணவனை இழந்து தவித்த அந்த இந்து பெண்ணுக்கு எம்.எல்.ஏவின் உதவியுடன் அந்த ஊர் முஸ்லீம் மக்கள், அரசு வேலை வாங்கி கொடுத்தனர்.
ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் பாபி கவுல் என்ற அந்த பெண்ணும் இறந்துவிட்டார். இதையடுத்து அந்த 4 குழந்தைகளும் பெற்றோரின்றி ஆதரவின்றி தவித்தனர். ஆதரவற்ற அந்த குழந்தைகளை முஸ்லீம் மக்கள் அரவணைத்தனர். அந்த 4 இந்து குழந்தைகளையும் தாங்களே வளர்க்க முடிவு செய்த முஸ்லீம்கள், விளைபொருட்களை விற்று அதன்மூலம் வந்த 80000 ரூபாய் பணத்தை, அந்த குழந்தைகளின் பெயரில் வங்கிக்கணக்கில் செலுத்தினர்.
மேலும் அந்த குழந்தைகளின் படிப்பு, பராமரிப்பு, உணவு செலவுகளையும் அந்த கிராம முஸ்லீம் மக்களே ஏற்று அந்த குழந்தைகளை வளர்க்க முடிவு செய்துள்ளனர். சேதமடைந்த அவர்களின் வீட்டையும் புணரமைத்து தந்துள்ளனர்.
சாதி, மத ரீதியான இன உணர்வுகளை வைத்து வாக்கு வங்கி அரசியல் செய்யப்படுகிறது. ஆனால், பிரிவினை என்பது மக்களிடையே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில், மேற்கு வங்கத்தில் ஏழை இந்து பெண்ணின் திருமணத்தை முஸ்லீம் மக்கள் நடத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. மத ரீதியான அரசியலை முன்னெடுக்கப்பட்டாலும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவம் அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.