
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் தனிக் கட்சி தொடங்கியிருப்பது உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாதி கட்சிக்குள் திடீரென பிளவு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவ் சிபாரிசு செய்த நபர்களை மாநிலத் தலைவரும் முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ஷிவ் பால் யாதவ் அங்கீகரிக்காததால் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் தன்னிடமே இருப்பதாக அகிலேஷ் போர்க்கொடி உயர்த்த பிரச்சனை தேர்தல் ஆணையத்திற்குச் சென்றன.
எதிர்பார்த்தது போலவே அகிலேஷூக்கே கட்சியையும் சைக்கிள் சின்னத்தையும் ஆணையம் வழங்கியது. தேர்தல் நெருங்கி வந்த நிலையில் சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்ட இந்த பிணக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. இதற்கு தகுந்தது போல யாருக்காகவும் தாம் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று முலாயம்சிங் யாதவ் வெளிப்படையாகவே அறிவித்தார்.
தந்தையின் ஆதரவில்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்ட அகிலேஷ் யாதவ் படுதோல்வி அடைந்தார். 403 இடங்களில் அகிலேஷ் 50க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றார். தேர்தல் தோல்வி சமாஜ்வாதி கட்சிக்குள் மீண்டும் பிரச்சனையை அதிகரித்தது.
இதற்கிடையே கட்சிப் பொறுப்புகளை முலாயம்சிங்கிடம் ஒப்படைக்காவிட்டால் தனிக் கட்சி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஷிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சமாஜ்வாதி செக்குலர் மோட்சா என்ற புதிய கட்சியை தொடங்குவதாக ஷிவ்பால் யாதவ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.