Modi visits Wayanad : வயநாடு நிலச்சரிவு.! சம்பவ இடத்திற்கு நேரில் செல்லும் மோடி- நிவாரண உதவி அறிவிக்கப்படுமா?

By Ajmal KhanFirst Published Aug 8, 2024, 11:36 AM IST
Highlights

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை மறுதினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
 

வயநாடு நிலச்சரிவு- மண்ணில் புதைந்த மக்கள்

கேரளாவில் பெய்த கன மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இந்தநிலையில் தான் கடந்த 30ஆம் தேதி இரவு யாரும் எதிர்பாராத வகையில் வயநாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில்  சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டைமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் உருகுலைந்து போயுள்ளது. 400க்கும் மேற்பட்ட உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 100 பேரின் நிலை தெரியாமல் உள்ளது. இதனையடுத்து ராணுவம் மற்றும் மீட்பு படையினர் காணமல் போன நபர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர். 

Latest Videos

வயநாடு செல்லும் மோடி

இந்தநிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவம் நடைபெற்ற அடுத்த தினமே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தவர், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு சார்பாக இதுவரை எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனிடையே பிரதமர் மோடி நாளை மறுதினம் சனிக்கிழமை அன்று வயநாட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

வருகிற 10ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் கேரளா செல்லும் மோடி கண்ணூரில் தரையிறங்குகிறார் அங்கிருந்து  பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். இதனையடுத்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். அப்போது வயநாடு நிலச்சரிவிற்கு மத்திய அரசு சார்பாக நிதி ஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

click me!