காதி கிராப்டில் ‘காந்திக்கு பதிலாக மோடி படம்’ - தொழிலாளர்கள் அதிர்ச்சி..!!

First Published Jan 12, 2017, 5:54 PM IST
Highlights

கதர் கிராம தொழில்கள் வாரியம் சார்பாக 2017ம் ஆண்டுக்கான காலண்டர், டைரி ஆகியவற்றில் வழக்கமாக இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்துக்கு மாறாக, பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதனால், கதர் கிராம ஊழியர்கள் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் உள்ள கதர் கிராம தொழில்கள் ஆணையம்(கே.வி.ஐ.சி.) வெளியிட்ட டைரி, காலண்டரில் இந்த படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி, வேதனை

ஆண்டுதோறும் கதர் கிராம தொழிலில் இருக்கும் தொழிலாளர்களுக்கு டைரியும், காலண்டரும் கொடுக்கப்படுவது வழக்கம். புத்தாண்டு பிறந்ததையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட காலண்டர், டைரி கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காந்திக்கு பதில் மோடி

அதில் பெரிய சைஸ் படத்தில் பிரதமர் மோடி கதர் ஆடை அணிந்து ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. மோடிக்கு பின்னால், மகாத்மாகாந்தியின் ராட்டை சுற்றும் வழக்கமான படம் சிறிய அளவில் இடம் பெற்று இருந்தது.

பாரம்பரியம் மாற்றம்

கதர் பொருட்கள் என்றாலே, அதில் மகாத்மாகாந்தி, ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கதர் ஆடை என்றாலே மக்கள் மனதில் இந்த படம்தான் நினைவுக்கு வரும்.  ஆனால், இப்போது புதுவிதமாக பைஜாமா, குர்தா, மேல்கோட்அணிந்து மோடி அமர்ந்து ராட்டை சுற்றும் படம் இருப்பது மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களுக்கு வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான வில்லே பார்லேயில் உள்ள கதர் கிராம தொழில்கள் மையத்தில், உள்ள ஊழியர்கள் இந்த படத்தைப் பார்த்து செய்வது அறியாது திகைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கையில் கருப்பு துணி அணிந்து பணியாற்றி உள்ளனர் என செய்திகள்தெரிவிக்கின்றன.

கேள்விக்கு இடமில்லை

இது குறித்து கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனாவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறுகையில், “ இது வழக்கமான நடைமுறையில் இருந்து மாறப்பட்டு இருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த கதர் தொழில்களும் காந்திய சித்தாந்தங்களை, போதனைகளை பின்பற்றி நடக்கிறது. அவர்தான் இந்த கதர் அமைப்பின் ஆன்மா. இதில் கேள்விக்கே இடமில்லை.

மோடி காதிஅணிகிறார்

பிரதமர் மோடி நீண்டநாட்களாக கதர் ஆடை அணிகிறார். மக்கள் மத்தியில் காதி ஆடையை பிரபலப்படுத்தவும், வெளிநாடுகளில்பிரபலப்படுத்தவும் அவர் கதர் ஆடையை அணிகிறார். அவருக்கே உரிய வகையில் நவீனமாக தயாரிக்கப்பட்ட கதர் ஆடைகளை அணிந்து வருகிறார்.

அரசே துடைத்து எறியலாமா?

ஆனால், காந்தியின் சிந்தனைகள், தத்துவங்கள், எண்ணங்களை அரசே துடைத்து எறிந்துவிட முனைவது வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை காலண்டரில் போட்டார்கள். இப்போது காந்தியின் படமே காலண்டர், டைரியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது'' எனத் தெரிவித்தார்.

click me!