
உத்தரப்பிரதேசம், லக்னோ நகரில் ஜனவரி 2-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் மீண்டும் மிகப்பெரிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள 130 கோடிமக்களையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 50 நாட்கள் முடிந்த நிலையில், இன்று அல்லது நாளையோ பிரதமர் மோடி, இந்த அறிவிப்பு தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
பொதுக்கூட்டம்
இந்த சூழலில் புத்தாண்டுக்கு மறுநாள் லக்னோ நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய பேரணியும், பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது. அப்போது, ரூபாய் நோட்டு அறிவிப்பு போன்று, மிகப்பெரிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களும், மூத்த அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய
இது குறித்து பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “ லக்னோவில் ஜனவரி 2-ந்தேதி நடக்கும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி யாரும் எதிர்பாரா வகையில் மிக்பெரிய அறிவிப்பை வெளியிடப்போகிறார். கடந்த 50 நாட்களாக ரூபாய் நோட்டு தடையால் மக்கள் அனுவித்து வந்த வேதனைகளுக்கு தீர்வாக அது அமையும். அதேசமயம், கருப்பு பணம் தொடர்ந்து வைத்து இருப்பவர்களுக்கு அது ஆபத்தாக அமையும்.
இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக 1.38 லட்சம் குழுக்கள் அமைத்து இருக்கிறோம். இதுவரையில் இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
பினாமி சொத்து சட்டமா?
இதற்கிடையே சமீபத்தில் உத்தரப்பிரதேச தேர்தல் பொதுக்கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, 50 நாட்களை பயன்படுத்திக்கொள்ளாத கருப்புப் பண முதலைகளும், ஊழல்வாதிகளும் அதன்பின் மிகப்பெரிய சிக்கல்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பினாமி சொத்துகளுக்கு எதிரான சட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். நாட்டில் கருப்புபணம் பதுக்கியவர்கள் பெரும்பாலும், பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அவர்களுக்கு எதிரான சர்ஜிக்கல்ஸ்டிரைக்காக இது அமையுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.