
சபரிமலை அய்யப்பன் கோயில் வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டதால், பக்தர்கள் மத்தியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
கோயில் வளாகமான சன்னிதானத்தில் உள்ள ஆழிக்கு அருகே இருந்த ஒரு ஆலமரத்தில் இன்று காலை 8.20 மணியளவில் தீப்பிடித்தைக் கண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரத்தில் பொருத்தப்பட்டிருந்த LED அலங்கார விளக்குகளில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சன்னிதானத்தில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதினெட்டாம் படிக்கு பக்தர்கள் செல்லத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வழக்கம் போலப் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அனைத்து கோயில் நடவடிக்கைகளும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.