தேசியளவில் பொதுமுடக்கத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிகிறது.
நான்காம் கட்ட பொதுமுடக்கத்திலேயே நிறைய தளர்வுகள் செய்யப்பட்டன. நாளையுடன் நான்காம் கட்ட பொதுமுடக்கம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஜூன் 30 வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும், ஏற்கனவே இருக்கும் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கோவில்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் ஹோட்டல்களையும் ஜூன் 8ம் தேதி முதல் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.