ரூ.100 கோடிக்கும் அதிகமாக மாயாவதி கட்சியின் கணக்கில் டெபாசிட்

First Published Dec 27, 2016, 6:58 AM IST
Highlights


ரூ.100 கோடிக்கும் அதிகமாக மாயாவதி கட்சியின் கணக்கில் டெபாசிட்

உத்தரப்பிரதேசத்தில் முக்கிய கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் ரூபாய் நோட்டு தடைக்கு பின், ரூ.100 கோடிக்கும் மேலான செல்லாத ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதையும், அவரின் சகோதரர் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதையும் அமலாக்கப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ வழக்கமான சோதனையாக அனைத்து வங்கிகளிலும் ெசய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கரோல்பாரக் பகுதியில் உள்ள யுனைட்டெட் வங்கியில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தோம். 

இந்த பணம் மத்திய அரசுஅறிவித்த ரூபாய் நோட்டு தடைக்கு பின் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிக்கணக்கை ஆய்வு செய்த போது, அது பகுஜன்சமாஜ் கட்சியின் வங்கிக்கணக்கு எனத் தெரியவந்தது. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்ட போது அவர்கள் பதில் ஏதும்   தெரிவிக்கவில்லை.

அதிகாரிகள் அந்த வங்கிக்கு சென்று பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட் குறித்து ஆய்வுசெய்தனர். அப்போது, ஏறக்குறைய ரூ. ஒரு கோடிக்கு ரூ.1000 நோட்டுகளாகவும் ரூ. 3 கோடிக்கு ரூ.500 நோட்டுகளாகவும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது என்பதை ஆவணங்கள் வாயிலாக தெரியவந்தது.

மேலும், ஒவ்வொரு நாளும் நாள் ஒன்றுக்கு ரூ. 16 முதல் ரூ.17 கோடிவரைவங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதே வங்கியில் ஆனந்த் என்பவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.1.43 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.19 லட்சம் செல்லாத ரூபாயில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவர் மாயாவதியின் சகோதரர் எனத்தெரியவந்தது.

இதையடுத்து இந்த இரு வங்கிக் கணக்குகள் குறித்த முழு அறிக்கையை அளிக்க வங்கிக்குக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும்,   வங்கியின் கண்காணிப்பு கேமரா, கே.ஓய்.சி. ஆவணங்களையும் அளிக்ககேட்டுள்ளோம். இது குறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம், கட்சிக்கு கிடைத்த, நன்கொடை, வருமானம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

மாயாவதியின் சகோதரர் ஆனந்த்துக்கு அமலாக்கப்பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கப்படும், மேலும், வருமானவரித்துறைமூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வருமானவரி குறித்தும்,வரி ஏய்ப்பு குறித்தும் விசாரிக்கப்படும்”  எனத் தெரிவித்தனர்.

 

 

 

 

 

.

 

click me!