
விவசாயிகள் பயிர்கடன் செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம்
விவசாயிகள் பயிர்க்கடனை திரும்ப செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தது. 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல்போன காரணத்தால் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல விவசாயிகளும் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அளவே பணம் வைத்திருக்கும் விவசாயிகள் விதைகள், உரம் போன்ற வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், தங்கள் பயிர்க்கடனை திரும்ப செலுத்தவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் மத்திய, மாநில நிறுவனங்களில் விதைகள் வாங்கிக்கொள்ளலாம் என அரசு முன்பு அறிவித்திருந்தது. அதேபோல உரக் கம்பெனிகளையும் விவசாயிகளுக்கு உரங்களை கடன் அடிப்படையில் வழங்கும்படி உத்தரவிட்டது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரையிலான காலத்தில் விவசாயிகளின் கடனை திரும்ப செலுத்தும் நாள் வந்தால் அவர்களுக்கு கூடுதலாக 60 நாட்கள் வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தினால் அவர்களுக்கு 3 சதவீத மானியமும் கிடைக்கும்.
உதாரணத்துக்கு ஒரு விவசாயியின் பயிர்க்கடன் நவம்பர் 15-ந் தேதி திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்றால், அந்த விவசாயிக்கு அந்த தேதியில் இருந்து கூடுதலாக 60 நாட்கள் (ஜனவரி 15-ந் தேதி வரை) வழங்கப்படும். அதற்குள் அவர் கடனை திரும்ப செலுத்திவிட்டால் 3 சதவீத வட்டி மானியமும் கிடைக்கும்.
.