
உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையின் அழகைப் பொதுமக்கள் இடையூறின்றி ரசிப்பதை உறுதி செய்யும் வகையில், அங்குள்ள கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, கடந்த டிசம்பர் 22-ம் தேதி மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்த பின் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தற்போது 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். உலகில் எந்தக் கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். மற்ற தேவையற்ற கடைகளை அகற்ற வேண்டும்.
மெரினாவின் ஒரு பகுதி ஏற்கனவே 'நீலக்கொடி' (Blue Flag) சான்று பெற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பகுதிகளை இந்தச் சான்று பெற தயார் செய்ய வேண்டும். குறிப்பாக, தலைவர்களின் நினைவிடங்களுக்குப் பின்புறம் உள்ள பகுதியை இந்தத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்தப் பகுதிகளில் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"கடற்கரை என்பது மக்கள் வந்து இயற்கையை ரசிப்பதற்காகவே தவிர, அதனை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது. சாலையில் இருந்து பார்த்தால் கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்குக் கடைகள் மறைக்கின்றன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடைகள் ஒருபோதும் இடையூறாக இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.
கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய திட்டத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.