
‘ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களின் அச்சம் நியாயமில்லை’...அவசரச் சட்டம் குறித்து மார்க்கண்டேயே கட்ஜூ கருத்து
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், நிரந்தர தீர்வு கேட்டு போராடும் இளைஞர்கள், மாணவர்களின் அச்சம் நியாயமற்றது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூகருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக அறவழி
ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை தொடர்ந்து 3 ஆண்டாக இந்த ஆண்டும் நீடித்தது. ஆனால், ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்திய தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் தன் எழுச்சியாக மாநிலம் முழுவதும் கடந்த 7 நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்தினர்.
தொடரும் போராட்டம்
இதையடுத்து, மாநில அரசு அவசர அவசரமாக மத்தியஅரசுடன் பேசி அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் மாணவர்கள், இளைஞர்கள் நிரந்தரச்சட்டம் கொண்டு வந்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
டுவிட்டர் செய்தி
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆலோசனைகளையும், ஆதரவாகவும் இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ தமிழக மக்களுக்கு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது-
நிரந்தரமாகும்
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அவசரச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தபின்னும், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் நிரந்தரத்தீர்வு கேட்டு, அவசரச்சட்டத்தை நினைத்து அச்சப்படுவது நியாயமற்றது. இந்த அவசரச்சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்பட்டபின், அது நிரந்தரமாகிவிடும்.
ஆளுநர் கையொப்பம்
சிலர் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் என்பது தற்காலிகமான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அது மாநில ஆளுநர் கையொப்பம் மட்டும் பெற்று இருந்தால் அது தற்காலிகமானது. ஆனால், இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 213(2) ன்படிகொண்டுவரப்பட்டதால், இது நிரந்தரமானது.
நியாயமற்றது
தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடி, ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பிக்க அவசரச்சட்டத்துக்கு பதிலாக, சட்டமுன்வடிவு கொண்டு வந்து சட்டமாக்கும். இதுதான் நிரந்தரமானது. இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனு, சில நேரங்களில் உச்சநீதிமன்றத்தில் தோல்வி அடையலாம். ஏனென்றால், இந்திய அரசியலமைப்பு சட்டம் 254(2) பிரிவின்படி குடியரசு தலைவர் கையொப்பம் இட்டுள்ளதால், இது தோல்வி அடையும். ஆதலால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்களின் அச்சம் நியாயமற்றது'' என்று தெரிவித்துள்ளார்.