‘முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள்’ - இபோபி சிங்குக்கு மணிப்பூர் ஆளுநர் வலியுறுத்தல்

First Published Mar 13, 2017, 4:58 PM IST
Highlights
manipur governor asks to resigns cm


மணிப்பூரில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று ஓக்ராம் இபோபி சிங்கை ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

60 தொகுதிகள்

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், பாரதியஜனதா கட்சி 21 தொகுதிகளையும் கைப்பற்றின.

ஆட்சிக்கு பா.ஜனதா உரிமை

பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. மற்ற கட்சிகள் 11 இடங்களைப் பெற்று இருந்தன. ஆனால், தனிப் பெரும்பான்மையான கட்சியான காங்கிரஸ் கட்சி இருந்தபோதிலும், பாரதிய ஜனதா, , தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளான தேசிய மக்கள் கட்சி(என்.பி.பி.), லோக் ஜனசக்தி கட்சி(எல்.ஜே.பி.), நாகா மக்கள்முன்னணி(என்.பி.எப்.) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைக்க 32 எம்.எல்.ஏ.க்களோடு உரிமை கோரி இருக்கிறது.

ஆளுநருடன் சந்திப்பு

இதற்கிடையே முதல்வர் இபோபி சிங், துணை முதல்வர் கெய்காம்கம், காங்கிரஸ் தலைவர் டி.என்.ஹவோகிப் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவைச் சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது, அடுத்த ஆட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்பதால், உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் என்று முதல்வர் இபோபி சிங்கிடம், ஆளுநர் வலியுறுத்தினார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விதிமுறையின்படி, நடப்பு முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்த அரசு அமைப்பதற்கான எந்த பணியையும் தொடங்க முடியாது என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ கடிதம்

மேலும் இந்த சந்திப்பின் போது, இபோபி சிங், தங்களிடம் 28 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அந்த எம்.எல்.ஏ.க்கள் குறித்த பெயர் பட்டியலை சாதாரண காகிதத்தில் காண்பித்ததாக கூறப்படுகிறது. அப்போது, உங்களுக்கு ஆதரவு தரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வர வேண்டும் என்றும், அந்த கட்சியின் ‘லெட்டர்பேடில்’ 4 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம், கட்சி தலைமை ஆதரவு கடிதம் இருக்க வேண்டும். இதுபோன்ற சாதாரண காகித்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆயத்தம்

அதே சமயம், பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம், தேசிய மக்கள் கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம், எல்.ஜே.பி. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை ஆளுநரிடம் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

click me!