
மணிப்பூரில் இரு மாதங்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் என் பைரன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை மதியம் 1 மணியளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்குவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.
மைதேயி - குகி சமூகத்தினருக்கு இடையே, நடைபெற்று வரும் இனக்கலவரங்களுக்கு மத்தியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் பாஜகவை சேர்ந்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிகிறது. அதேசமயம் அவர் ராஜினாமா செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளும் அம்மாநிலத்தில் வலுத்து வருகின்றன.
மணிப்பூரில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, மணிப்பூரின் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறி, மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டுவருமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டனர். மேலும், பைரன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக மணிப்பூரைச் சேர்ந்த ஒன்பது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தனர்.
ஹெலிகாப்டரில் ஸ்பாட்டுக்கு சென்ற ராகுல்: நிவாரண முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஆறுதல்!
இந்த பின்னணியில், இரண்டு மாதங்களாகியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தத் தவறியதால், முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. மணிப்பூர் கலவரத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.