A Mysterious Person Entered The Parliament: நாட்டின் அதிகப்பட்ச பாதுகாப்பு கொண்ட தலைநகர் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பாதுகாப்பை மீறி ஒருவர் வளாகத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத ஒரு நபர், ரயில் பவன் பகுதியில் உள்ள மரத்தின் உதவியுடன் நாடாளுமன்ற மதிலை ஏறி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கருடா வாசல் (Garuda Gate) வரை சென்றார்.
நாடாளுமன்றத்தில் நுழைந்த நபர்
இதை உடனடியாக கண்டறிந்த நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்கள், அவரை உடனடியாக பிடித்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த அடுத்த நாளில் நடந்துள்ளது அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற நபரை உடனடியாக கைது செய்து, தற்போது டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.
அந்த நபர் யார்?
மேலும், உளவுத்துறை (IB) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல மத்திய அமைப்புகள் இந்த நபரை விசாரித்து வருகின்றன. அந்த நபரின் அடையாளம், அவரது நோக்கம் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த விதம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் தான் அந்த நபர் யார்? எதற்காக நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றார் என்பது தெரியவரும்.
இது இரண்டாவது முறை
நாட்டின் அடையாளமாக திகழும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பாடு இது முதன்முறை அல்ல. கடந்த 2023 டிசம்பர் 13 அன்று, 2001 நாடாளுமன்ற தாக்குதலின் 22வது ஆண்டு நினைவு தினத்தன்று, சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் டி என்ற 2 பேர் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையை வெளியேற்றியனர். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இருக்கும்போதே நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
இந்த சம்பவத்துக்கு பிறகு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எம்.பி.க்களாக இருந்தாலும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.