
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் பணி அமர்த்தப்பட்டனர். பின்னர், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மக்கள் நலப்பணியாளர்கள் அதிமுக அரசால் பணி நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 22-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும். இதன் மூலம் பணி நீக்கம் செய்யபப்ட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரும் மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.