சொத்துக்காக தனது கணவரையே மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் என்ற பகுதியில், வசித்து வந்த ஷங்கர் கைக்வாட். இவரை கடந்த மே மாதத்திலிருந்து காணவில்லை என இவரின் மனைவி ஆஷா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் ஆஷாவிற்கு தொடர்பிருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர் புகார் அளிக்கும்போதே கணவன் காணவில்லை என்ற பரபரப்பே இல்லாமல் காணப்பட்டதால், பொலிசாருக்கு சந்தேகம் வலுத்து வந்தது. எனவே, ஆஷாவின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில், கூலிப்படை வைத்து அவர் தனது கணவரை கொலை செய்தது தெரிய வந்தது.
கணவர் ஷங்கருக்கு ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால், ஆஷா பலமுறை வற்புறுத்தியும் தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த ரூ.15 கோடி மதிப்புடைய சொத்தை எழுதிவைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்தால் தான் அந்த சொத்து தனக்கு கிடைக்கும் என்ற சட்டம் உள்ளதால், அந்த சொத்தை பெற கணவரை கொல்வது என்ற முடிவிற்கு ஆஷா வந்துள்ளார்.
எனவே, ஒரு கூலிப்படையை அணுகி ரூ.30 லட்சம் தருவதாக கூறி, ரூ.4 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். அதையடுத்து, கடந்த மே மாதம் 18ம் தேதி ஷங்கரை ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஷா அவருக்கு கூல்ட்ரிங்க்சில் மயக்க மருந்து கொடுத்துள்ளார்.
ஷங்கர் மயங்க தொடங்கியவுடன் கூலிப்படையை சேர்ந்த 4 பேரும் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அவரின் உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பிறகு ஒன்று தெரியாதவர் போல் தனது கணவரை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஆஷாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர்.