மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.34 ஆயிரம் கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து இருக்கிறார்.
தற்கொலை
மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
போராட்டம்
மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் அறிவிப்பு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கடன் தள்ளுபடி பற்றிய விவரங்களை முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார்.
ரூ.34 ஆயிரம் கோடி
அதன்படி விவசாயிகளின் பயிர் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். 40 லட்சம் விவசாயிகளின் கடன் சுமை நீங்கும். இந்த திட்டத்தின் கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும் என்றும் அவர் கூறினார்.