"கொன்றால் பாவம் தின்றால் போச்சு.." இப்ப இல்ல... பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை

First Published Mar 31, 2017, 3:12 PM IST
Highlights
life sentence for cow killers


தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள், “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்று, ஆனால், அந்த பழமொழி குஜராத்தில் செல்லுபடியாகாது. பசுவைக் கொன்றால் 7 ஆண்டு ஜெயில் என்று இருந்ததை மாற்றி ஆயுள் சிறையாக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குஜராத்தில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்கு வங்கியை கைப்பற்ற ஆளும் பாரதிய ஜனதா அரசு பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் வகுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பசுக்கடத்தல், கொலை செய்தல், மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது, கடந்த 2011ம் ஆண்டு குஜராத் விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1954 என்பதில் திருத்தம்செய்து, பசுக்களை கடத்துவோருக்கும், கொலை செய்வோருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதமும், 7ஆண்டு சிறைதண்டனையும் விதித்து திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

மேலும், மாநிலத்தில் முற்றிலுமாக பசுவதைக்கு தடை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், குஜராத் முதல்வராக இருக்கும் விஜய் ரூபானி, கடந்த சில மாதங்களாக பசுவதையை தீவிர குற்றமாக்கி,அதை முற்றிலும் தடுக்க தீவிரமாக சட்டம் கொண்டுவரப்படும் என பேசி வந்தார்.

குறிப்பாக பசுக்கள் மீது அதிக பற்று வைத்துள்ள படேல் சமூகத்தினரின் வாக்குகளை பெறும் வகையில், பசுவதைக்கு கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் எனக் வாக்குறுதி அளித்து இருந்தார்.

மேலும், குஜராத் அரசு சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பசு கொலையைத் தடுக்கும் வகையில் குஜராத் அரசு சார்பில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய் ரூபானி, பசுக்களை கொலை செய்வர்களுக்கும், கடத்துபவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்ததை இன்று கொண்டு வந்தார்.

இதன்படி, பசுக்கடத்தல், பசுக்கொலைக்கு அதிகபட்சமாக 7ஆண்டு சிறையும், ரூ. 50 ஆயிரம் அபராதமாக இருப்பது மாற்றப்பட்டு, ஆயுள் சிறையும், அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் நிரந்தரமாக முடக்குவது, ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக மாற்றும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து,ஒரு மனதாக நிறைவேறியது.

இனி, குஜராத் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியில் பசுக்கடத்தல், மாட்டிறைச்சி கடத்தல், பசுக்கொலை செய்தால், ஆயுள் சிறையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!