
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற ஆதார் அவசியம். அடையாளச் சான்றாகவும் ஆதார் பயன்படுகிறது. பலரும் சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பெற்றிருப்பதால், தகவல்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இலவசமாகப் புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள்.
ஆதார் அட்டைதாரர்கள் ஜூன் 14, 2025 வரை மட்டுமே அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையதளம் வழியாக இலவசமாகப் புதுப்பிக்க முடியும். அதன் பிறகு, ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். UIDAI விதிகளின்படி, ஆதார் தாரர்கள் தங்கள் தகவல்களைச் சரியாக வைத்திருக்க, பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும்.
இணையதளம் வழியாக இலவசமாகப் புதுப்பிப்பது எப்படி?
1. UIDAI இணையதளத்திற்குச் சென்று 'மை ஆதார்' (My Aadhaar) பக்கத்திற்குச் செல்லவும்.
2. 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
3. பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
4. உள்நுழைந்த பிறகு, தற்போதைய POI மற்றும் POA ஆவணங்களைச் சரிபார்க்கவும்.
5. புதுப்பிக்க வேண்டுமென்றால், 'ஆவணப் புதுப்பிப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. புதுப்பிக்க வேண்டிய ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து, தெளிவான ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
7. கோப்புகள் JPEG, PNG அல்லது PDF வடிவத்திலும், 2MBக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
8. விவரங்களைச் சரிபார்த்து, புதுப்பிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். புதுப்பிப்பின் நிலையை அறிய, சேவை கோரிக்கை எண்ணை (SRN) குறித்து வைக்கவும்.