
Government Employee Suspended Who Mocked woman Killed Air India Flight Crash: அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதியதில் 240க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் இந்த விமான விபத்து உலுக்கியுள்ளது. இந்த விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் ரஞ்சிதா ஆர். நாயர் என்பவரும் பலியானார்.
விமான விபத்தில் பலியான பெண்ணை கேலி செய்த அரசு ஊழியர்
இந்நிலையில், ரஞ்சிதா ஆர். நாயர் குறித்து ஆபாசமாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளரிகுண்டு தாலுகா அலுவலகத்தில் ஜூனியர் சூப்பிரண்டு ஆக பணிபுரியும் பவித்ரன், ரஞ்சிதாவை கேலி செய்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்கம்
உயிரிழந்த ரஞ்சிதவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவின் கீழ் பவித்ரன் ஒரு அவதூறான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தப் பதிவு பொதுமக்களின் சீற்றத்தையும் சமூக ஊடக தளங்களில் பரவலான எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, வருவாய் அமைச்சர் கே. ராஜன் தலையிட்டு காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இம்பசேகர் கே.யை உடனடியாக அந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
கேரள அமைச்சர் உத்தரவு
"துயரமான விமான விபத்தில் இறந்த ரஞ்சிதா ஆர். நாயரை குறிவைத்து அவதூறான கருத்தைப் பதிவிட்டதற்காக வெள்ளரிகுண்டு தாலுகாவின் ஜூனியர் சூப்பிரண்டு பவித்ரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற ஒரு இழிவான செயல் ஒரு அரசு ஊழியருக்குத் தகாதது. இது என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று அமைச்சர் கே. ராஜன் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
பவித்ரன் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான இ.சந்திரசேகரனுக்கு எதிரான அவதூறான பதிவிற்காக அவர் செப்டம்பர் 2024 இல் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த இடைநீக்கம் ஒரு மாதத்திற்கு முன்புதான் நீக்கப்பட்டது. ஆனாலும் பவித்ரன் திருந்தாமல் மீண்டும் தவறு செய்துள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவதூறான கருத்தை பவித்ரன் நீக்கிய போதிலும், அவர் இப்போது அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன்வைத்து வருகின்றனர்.