விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் முதல் நாளில் அமைச்சரின் மகன் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் முதல் நாளில் அமைச்சரின் மகன் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார்களை விட்டு ஏற்றி கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவானதால் விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினம் அமைச்சரின் மகன் ஆஜராகவில்லை. இதனிடையே கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யாமல் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பது ஏன் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜராகுமாறு போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பினர். இந்தநிலையில் லக்கிம்பூர் கேரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடாப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் யாரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என்று போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்தாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் அவர் கூறும் பதில்கள் புதிய திருப்பமாக அமையும் என்று கூறப்படுகிறது.