நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

Published : Jan 20, 2025, 02:58 PM ISTUpdated : Jan 20, 2025, 03:06 PM IST
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

சுருக்கம்

கொல்கத்தாவில் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி, கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அன்றைய தினம் அதிகாலை மருத்துவமனையில் உள்ள ஒரு கருத்தரங்கு மண்டபத்தில் முதுகலை பயிற்சி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றம் தொடர்பாக மறுநாள் சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் உடலுக்கு அருகில் காணப்பட்ட புளூடூத் இயர்போன் மூலம் கொல்கத்தா போலீசார் சஞ்சய் ராய் என்பவரை அடையாளம் கண்டனர். ராய் கழுத்தில் சாதனத்துடன் கருத்தரங்கு மண்டபத்திற்குள் நுழைவது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டது. அதன் அடிப்படையில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 15 அன்று பெண்கள் மற்றும் ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் போது ஒரு கும்பல் ஆர்ஜி கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை சேதப்படுத்தியதை அடுத்து இந்த விவகாரம் வன்முறையாக மாறியது.

இதனிடையே கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை "மிகவும் கொடூரமானது" என்று கூறியது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீண்டும் சேவையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டது.

இந்த சம்பவம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானதால், அப்போதைய ஆர்ஜி கர் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்..

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 33 வயதான சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தா காவல்துறையின் முன்னாள் குடிமைத் தன்னார்வலரான சஞ்சய் ராய், பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்ததாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. 

பிரிவு 66-ன் படி, சஞ்சய் ராய்க்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனையை வழங்குகிறது, இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம், அதாவது அந்த நபரின் இயல்பான வாழ்க்கையின் எஞ்சிய பகுதிக்கு சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சஞ்சய் ராய்க்கு இன்று தண்டனை விதிக்கப்பட உள்ள நிலையில், சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா காவல்துறையின் இரண்டு துணை பொது அதிகாரிகள், ஐந்து உதவி பொது அதிகாரிகள், 14 ஆய்வாளர்கள், 31 துணை ஆய்வாளர்கள், 39 உதவி துணை ஆய்வாளர்கள், 299 கான்ஸ்டபிள்கள் மற்றும் 80 பெண் போலீசார் ஆகியோர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிக்கான தண்டனையை மேற்குவங்கத்தின் சீல்டா நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, குற்றவாளியான சஞ்சய் ராய் ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அனிர்பன் தாஸ் பேசிய போது, “ இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ.7 லட்சமும் வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ