கொல்கத்தா வெள்ளத்தில் ரூ.3 கோடி புத்தகங்கள் நாசம்! சிறு வியாபாரிகள் வேதனை!

Published : Sep 25, 2025, 04:08 PM IST
Kolkata College street

சுருக்கம்

இந்த வாரத் தொடக்கத்தில் கொல்கத்தாவில் பெய்த 40 ஆண்டுகளில் இல்லாத கனமழையால், புகழ்பெற்ற காலேஜ் ஸ்ட்ரீட் புத்தகச் சந்தை வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வெள்ளப் பெருக்கால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் நாசமாகியுள்ளன.

இந்த வாரத் தொடக்கத்தில் கொல்கத்தாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்ததால், நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், வீடுகள் மற்றும் கடைகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று புகழ்பெற்ற காலேஜ் ஸ்ட்ரீட் (College Street) பழைய புத்தகச் சந்தையும் ஒன்றாகும். அங்கு வெள்ளத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மூழ்கி நாசமாயின.

திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை, 251.4 மி.மீ மழை பதிவானது. இதனால் முக்கியப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

கோடிக்கணக்கில் புத்தகங்கள் நாசம்

காலேஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள பெரும்பாலான புத்தகக் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பதிப்பகத்தாரும் புத்தக வியாபாரிகளும் பெரும் நிதி இழப்பால் கவலையடைந்துள்ளனர். வெள்ளத்தில் 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் நாசமாகியிருக்கலாம் என்று வர்த்தகர்கள் மதிப்பிடுகின்றனர். பல கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்துப் புத்தகங்களும் முழுமையாக அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வராததால், புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் நனைந்து நாசமாகிவிட்டது," என்று பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் (Publishers and Booksellers Guild) செயலாளரான திரு. திரிடிப் சட்டர்ஜி கூறினார். அவரது சொந்தக் கடையில் மட்டும் சுமார் 10-12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

டேய்ஸ் பப்ளிஷிங் (Deys’ Publishing) நிறுவனத்தின் உரிமையாளர் சுதீப்தா டே கூறுகையில், "எங்கள் நிறுவனத்துக்குக் குறைந்தது ரூ.8 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது; 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. இவ்வளவு பெரிய சேதத்தை நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை" என்று தெரிவித்தார்.

 

 

துர்கா பூஜைக்கு முன் ஏற்பட்ட பேரிழப்பு

புத்தக விற்பனையாளர்களுக்கு மிக முக்கியமான வியாபாரக் காலமான துர்கா பூஜை பண்டிகைக்குச் சற்று முன்னதாக இந்தச் சேதம் ஏற்பட்டிருப்பது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலேஜ் ஸ்ட்ரீட் பகுதிவாசிகள், 2020 மே மாதம் வீசிய ஆம்பன் புயலின் போது ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்கிறார்கள். தங்களுக்கு நினைவு தெரிந்து இந்தப் பகுதியில் இவ்வளவு தீவிரமான மழையைக் கண்டதில்லை என்றும் கூறுகின்றனர்.

கொல்கத்தா மேயர் ஃபிர்காத் ஹக்கிம் (Firhad Hakim), வெள்ளம் வடிவதற்கு கணிசமான கால அவகாசம் எடுக்கும் என்றும், வெள்ளத்திற்குப் பிறகு மின்சாரம் தாக்கியதில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

சிறு வியாபாரிகள் பாதிப்பு

இந்த வெள்ளப் பேரிடர், தெருவோரப் புத்தக விற்பனையாளர்களை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. நிறுவப்பட்ட கடைகளை வைத்திருப்பவர்களைப் போலன்றி, இந்தப் புத்தக விற்பனையாளர்கள் முறையான அமைப்பு இல்லாமல் செயல்படுவதால், எந்தவொரு இழப்பீட்டிற்கும் அவர்கள் தகுதி பெறவில்லை. ஆதரவு மற்றும் நிவாரணம் எதுவும் கிடைக்காமல், இவர்களில் பலர் தங்கள் மொத்தப் புத்தக இருப்பையும் இழந்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!